பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்போர் பிறப்பு சான்றிதழ் அளிக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது..
புதுடெல்லி: பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்போர் பிறப்பு சான்றிதழ் அளிக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பாஸ்போர்ட் விண்ணப்ப முறை தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை எளிமையாக்கப்பட உள்ளது என பதிலளித்துள்ளது. இதுகுறித்து பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் வி.கே.சிங், பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை அதற்கு பதிலாக ஆதார் அல்லது பான் கார்டை சமர்ப்பித்தாலே போதும் என தெரிவித்துள்ளார்.
அதுவே பிறப்பு சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும்
அவர் தெரிவித்துள்ளார். மேலும், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், அவர்களை பராமரித்த காப்பகத்திடம் இருந்து பிறந்த தேதி தொடர்பான ஆவணத்தை பெற்று அளிக்கலாம். புதிய பாஸ்போர்டில் தனிநபர் விபரங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சிடப்பட்டிருக்கும். 60 வயதிற்கு மேல் மற்றும் 8 வயதிற்கு கீழுள்ள அனைத்து பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கும் பாஸ்போர்ட் கட்டணத்தில் இருந்து 10% சலுகை அளிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பம் செய்வோர் பெற்றோரில் தந்தை அல்லது தாய் யாராவது ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும். இணைப்பு படிவத்தின் எண்ணிக்கையும் 15ல் இருந்து 9ஆக குறைக்கப்படுள்ளது. அது சுய ஒப்பம் இருந்தாலே போதுமானது. ஒப்புகை கையெழுத்து பெற வேண்டிய அவசியமில்லை. திருமணம் ஆனோர் திருமண சான்றிதழ் சமர்ப்பிக்கவோ, அவர்கள் விவாகரத்து பெற்றிருந்தால் அவர்களின் கணவர் அல்லது மனைவியின் பெயரையோ குறிப்பிடவோ தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Source -- http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=321667